.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..
Showing posts with label திராவிடர் கழகம். Show all posts
Showing posts with label திராவிடர் கழகம். Show all posts

Friday, 11 June 2010

அண்ணாவை நோகடித்த பெரியார்

பெரியாரின் திருமணமும் 'கண்ணீர்த் துளிகளும்'

வெங்கட் சாமிநாதன்

இந்தச் சமயத்தில்தான் ராஜாஜியைப் பெரியார் சந்தித்துப் பேசினார் என்று ஒரு பரபரப்பான செய்தி, பத்திரிகைகளில் வெளிவந்தது. இருவரும் வெகு காலமாக அரசியலில் இருப்பவர்கள், ஒரு காலத்தில் காங்கிரஸில் ஒன்றாகச் செயல்பட்டவர்கள். இன்னமும் நண்பர்கள் தான் என்று வேறு சொல்லப்பட்டது. சொல்லப்பட்டது என்றாலும், ஈ.வே.ரா மேடையேறினால் ராஜாஜி தன் நண்பர் என்ற சிந்தனையே அவருக்கு இராது. அவர் ஒரு பிராமணர் என்பதும் காங்கிரஸ் தலைவர் என்பதும் தான் முன் வந்து நிற்கும்; அவர் பேச்சின் தோரணையையும் தாக்குதலையும் தீர்மானிக்கும். இருப்பினும், 'என் நண்பரே ஆனாலும், ராஜாஜி ஒரு பிராமணர் ஆதலால் பிராமணருக்குச் சாதகமாகத்தானே அவர் சிந்திப்பார், நமக்கு சாதகமாகவா அவர் எண்ணங்கள் இருக்கும்?' என்றும் அடிக்கடி சொல்வார் மேடைகளிலும் எழுத்திலும்.

இருப்பினும் அவர் ராஜாஜியைச் சந்தித்துப் பேசுகிறார், திருவண்ணாமலையில் என்பதும் அதுவும் திடீரென நிகழ்ந்த சந்திப்பு என்பதும் அதுவரையும் அந்த மாதிரியான சந்திப்பிற்கான பிரமேயம் ஏதும் இல்லாமல் அது ரகசியமாகவே நிகழ்ந்தது என்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திராவிட கழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனேகமாக அனைவருக்குமே அது அதிர்ச்சியைத் தந்தது. எதிரும் புதிருமான இந்த இரு தலைவர்கள் எந்தக் காரணம் கொண்டும் சந்திப்பார்கள் என்பதைத் திராவிட கழகத்தவர் எவரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். எனவே, பின்னர் இதை அடுத்து நடந்த ஒரு மகாநாட்டில், அண்ணாதுரை, பெரியாரிடம், 'உங்கள் இருவரிடையே என்ன பேச்சு நடந்தது என்று சொல்லவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதற்குப் பெரியார், 'நாங்கள் அரசியல் பேசவில்லை, என் சொந்த விஷயமாகத்தான் பேசிக்கொண்டோம். அதை நான் இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்று சொல்லித் தட்டிக் கழித்ததாகவும் செய்திகள் வந்தன. அண்ணாதுரை ஏதோ ஒரு அன்னியரைக் கேட்பது போல பொது மேடையில் கேட்க நேர்ந்ததும், அதற்குப் பெரியார் சொன்ன பதிலும், ஒரு கட்சியின் பெரிய தலைவர்கள் இருவரும் பரிமாறிக்கொள்ளும் பேச்சாகத் தோன்றவில்லை. இருவருக்கும் இடையே நெடு நாட்களாக ஏதோ தமக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாத உரசலும் புகைச்சலும் இருப்பதைத்தான் காட்டுவதாகவும் விமரிசனங்கள் வந்தன. படிப்பகங்களிலும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். இதில் கட்சி பிரிந்து காரசாரமாக வாதங்கள் நடந்ததையும் கழகப் படிப்பகங்களில் கழகப் பத்திரிகைகளிலும் மற்ற செய்திப் பத்திரிகைகளிலும் நான் பார்த்தேன்.

இவற்றைத் தொடர்ந்து தான் ஈ.வே.ரா - ராஜாஜி சந்திப்பும் அதைத் தொடர்ந்த பரபரப்பான பல சம்பவங்களும். 'அது என் சொந்த விஷயம்' என்று சொல்லித் தட்டிக் கழித்த போதிலும், அதைத் தொடர்ந்து ஒரு சில நாட்களிலேயே, பெரியார் - மணி அம்மை திருமணம் பற்றிய செய்தி வந்தது. இது ஒரு பெரும் புயலையே கிளப்பிவிட்டது. பெரியாருக்கு அப்போது வயது எழுபதுக்கு மேல். மணியம்மைக்கு வயது 26 என்று சொல்லப்பட்டது. வெகு வருடங்களாக, வயதான தலைவருக்கு மகள் போல, பேத்தி போல உதவ வந்த பெண்ணைத் தாத்தா கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று கிளம்பினார் என்றால்..... எல்லாக் கழகப் பத்திரிகைகளிலும், விடுதலை தவிர மற்றவற்றில், இது பெரிய சர்ச்சைக்கான விஷயமாகியிருந்தது. பொருந்தாத் திருமணம் என்றும், இதுகாறும் பெரியாரும் திராவிட கழகமும் பேசி வந்த கொள்கைகளுக்கு விரோதமான ஒரு செயல் என்றும் அத்தகைய செயலைப் பெரியாரே செய்துவிட்டு அது தன் சொந்த விஷயம் என்றும் கட்சிக்கு அதில் சம்பந்தமில்லை என்றும் சொன்னது கழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

"எனக்கும் என் சொத்துகளுக்கும் ஒரு வாரிசாக, என்னுடன் கடந்த பல வருடங்களாகப் பழகி என் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரைச் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக்கொள்ளும் ஏற்பாடு இது. என் நலத்திலும் இயக்கத்திலும் உண்மையான பற்றும் கவலையும் நம்பிக்கையும் கொண்டுள்ள, பல வருடங்களாக என்னுடன் இருந்து என் நம்பிக்கையைப் பெற்றுள்ள மணி அம்மையை வாரிசாக ஆக்கிக்கொள்வதற்குத் தான் இந்த ஏற்பாடு" என்று இப்படி ஏதோ பெரியார் விளக்கம் தந்துகொண்டிருந்தார். ஆக, அன்று வரை அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த அண்ணாத்துரை மட்டுமல்ல, அவர் கட்சி ஆரம்பத்திலிருந்து அன்று வரை அவருடன் கட்சியில் உழைத்த யாருமே அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரராகவில்லை; அவர் நம்பிக்கை வைத்து கட்சியையும் சொத்தையும் உரிமையாக்கப் போவது அவருக்கு உதவி செய்ய வந்த 26 வயது மணி அம்மையை என்பது 'இதுகாறும் நம்மை நம்பாத ஒரு தலைவரின் கீழா கட்சிக்காக உழைத்தோம்' என்று அனைவரையும் அதிர வைத்தது.

அண்ணாதுரை தன் திராவிட நாடு இதழில் தம் தலைவரின் திடீர் கொள்கை மாற்றத்தையும், இத்தனை வருடங்கள் தன்னுடன் கட்சியில் இருந்த எவரிடமும் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஒரு தலைவர் சொல்வதைக் கேட்டு கண்களில் கண்ணீர் மல்குவதாகவும், தலைவர் தம் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இறைஞ்சிக் கேட்டுக்கொள்வதாகவும் எழுதினார். உடனே பெரியார் தனக்கு எதிராகக் கிளம்பிய அத்தனை பேரையும் கண்ணீர்த்துளிகள் என்று விடுதலையில் கிண்டலும் வசையுமாக எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து தன்னோடு பல வருஷங்களாக கட்சிப் பணி புரிந்த அத்தனை பேரையும், பெயர் சொல்லக்கூட விருப்பம் இல்லாத வெறுப்பில், வருஷக் கணக்கில் 'கண்ணீர்த்துளிகள்' என்று சொல்வதையே விடாப்பிடியாகக் கொண்டிருந்தார்.

அநேகமாக என் நினைவு என்னைக் கைவிடவில்லையெனில் 1949 கோடையில் எப்போதோ கண்ணீர்த்துளிகள் என்ற கேலியுடனும் வெறுப்புடனும் அண்ணாதுரையையும் மற்றோரையும் குறிப்பிடத் தொடங்கியதை, திராவிட முன்னேற்றக் கழகம் 1967 தேர்தலில் வெற்றி பெற்று அண்ணாதுரை முதலமைச்சராக பதவி ஏற்கும் முன் பெரியாரின் ஆசியைப் பெற அண்ணா அவரிடம் சென்ற கணம் வரை, பெரியார் விடவில்லை என்று தான் நினைக்கிறேன். ஆனால் அண்ணாதுரையோ, பெரியாரின் அவ்வளவு கேலியும் பகைமையும் நிறைந்த 20 வருட தொடர்ந்த பிரசாரத்திற்கும் பதிலாக ஒரு முறைகூட, கோபத்துடனோ, வெறுப்புடனோ பெரியாரைப் பற்றி ஒரு வார்த்தை பேசியதில்லை. அண்ணாதுரையின் மீது கொண்ட என் மதிப்பு இன்னும் உயர்ந்தது. அது வரை அவரது பேச்சையும் எழுத்தையும் கண்ட வியப்பு, இப்போது அவரது குணத்தைக் கண்ட மதிப்பாக வளர்ந்தது.

கடைசியாக கும்பகோண வாழ்க்கையில் இன்னொரு புதிய சேர்க்கையையும் சொல்ல வேண்டும். மணல் வீடு என்ற சிறுகதைத் தொகுப்பு, சி.சு.செல்லப்பா என்பவர் எழுதியது, ஒன்று கிடைத்தது. அது எப்படி, யாரிடமிருந்து கிடைத்தது என்பதெல்லாம் நினைவில் இல்லை. அந்தக் கால கட்டத்தில் செல்லப்பாவை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கக் கூடியவர்கள் என்று யாரையும் எனக்கு நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை. அப்போது படித்து வெகு நாட்களுக்கு நினைவில் பதிந்துவிட்ட அத்தொகுப்பில் இருந்த ஒரு கதை இங்கே.

தாசில்தார் குடும்பம் ஒன்று. அவர்களுக்கு வெகு நாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. ஒரு ஜோஸ்யர் வழி சொல்கிறார். கன்றோடு ஒரு பசு மாட்டைத் தானம் கொடுத்தால் வழி பிறக்கும் என்று. தாசில்தார் அந்த நினைவிலேயே இருக்கும்போது, தாசில்தாரின் மனைவி, அந்த சமயத்தில் வீட்டுக்கு வந்த ஒரு கிராமத்துக் கணக்குப் பிள்ளையிடம் பசுவுக்கும் கன்றுக்கும் ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். பின் தடை ஏது? மாடும் கன்றும் தாசில்தார் வீட்டுக்கு வந்து சேர, அதிக நாள் பிடிக்கவில்லை. கோதானம் விமரிசையாக நடந்துவிடுகிறது. மாதங்கள் கழிகின்றன. தாசில்தார் குடும்பத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் விசேஷச் செய்தி ஒன்றும் வருவதாக இல்லை. ஒரு நாள் கணக்கப் பிள்ளை ஒரு தட்டில் பழம் பாக்கு, வெற்றிலை, பணம் சகிதம் தாசில்தார் தம்பதியரை முகத்தில் சந்தோஷம் வழிய நமஸ்காரம் பண்ணி 'பெரியவாள் ஆசீர்வாதம் செய்யணும், ரொம்ப நாளாக இல்லாத புத்திர பாக்கியம் கிடைச்சுடுத்து எனக்கு,' என்கிறார்.

இதற்குப் பின் ஒன்றிரண்டு வருடங்களில், புர்லா(ஓரிஸ்ஸா)வில் இருக்கும்போது, கலைமகள் பிரசுரமாக சி.சு.செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்பு 'சரசாவின் பொம்மை' (விலை ரூபாய் இரண்டு) என்று பார்த்த போது, "அட, இவர் அந்த மணல் வீடு செல்லப்பா அல்லவா?" என்ற வியப்புடன் அதிலிருந்து செல்லப்பாவை ஆவலுடன் படிக்கத் தொடங்குகிறேன்.

இதற்கெல்லாம் இடையில் பள்ளிக்கூடம், பாடங்கள், பரிட்சை என்றெல்லாம் இருக்கின்றனவே. இப்போது நினைத்துப் பார்க்கும்போது, பள்ளிக்கூடம் போவதும் வருவதும் அவ்வளவு தொல்லை தருவதாக இருக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. சுந்தரம் பிள்ளை பற்றி முன்னரே பிரஸ்தாபித்திருக்கிறேன். அவருடைய சரித்திர வகுப்புகள் தான் எனக்கு மிக சுவாரஸ்யமானவையாக இருந்தன. அடுத்து, ஆறு பெண்களும், என்னையும் சேர்த்து மூன்று பையன்களுமாக இருந்த ஹிந்தி வகுப்புகள். குறைந்த பேர்களைக் கொண்டிருந்ததாலும் ஹிந்தி ஆசிரியர் என்ற தன் ஆளுமையை எங்களுக்கு பூதாகாரமாக ஆக்கிக் காட்டாத காரணத்தாலும், ஹிந்தி வகுப்புகள் வெகு சகஜ பாவத்திலேயே நடந்ததாலும் ஹிந்தி வகுப்புகள் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தன. சுவாரஸ்யத்துக்கு மற்றொரு காரணம், ஆறு பெண்களும் தங்களுக்குள் எப்போதும் அரட்டை அடித்துக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் இருப்பதைப் பொருட்படுத்தியவர்கள் இல்லை. அவர்கள் அரட்டையை ஏதோ அப்பாவிகள் போல நாங்கள் கேட்டுக்கொண்டிருப்போம். ஹிந்தியில் அவர்கள் எல்லோருமே மிகத் தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

மற்றபடி வேறு எந்த வகுப்பும் எனக்குப் பிடித்தமாக இருந்ததில்லை. வகுப்பில் நடப்பதைக் கேட்டுக்கொண்டிருப்பேன். அவ்வளவே. ஆனால் இந்த ஒரு மாதிரியான சுவாரஸ்யமின்மை வருஷக் கடைசியில் வந்த இரு பரிட்சைகளின் போது தான் என்னைத் திகிலடைய வைத்தன. வேறு எங்கும் இல்லாதவாறு, பள்ளியின் இறுதி வகுப்பு அரசு நடத்தும் பொது பரிட்சையாதலால், தம் பள்ளியின் தேர்ச்சி எண்ணிக்கையைப் பெரிதாகக் காட்டுவதற்காக, இறுதித் தேர்வில் யாரை அனுமதிப்பது என்பதற்கும் ஒரு தேர்வு இருந்தது. நான் எப்படியோ அந்தக் கண்டத்தைத் தாண்டிவிட்டேன். எப்படி என்பது இப்போது யோசித்துப் பார்க்கும் போது விளங்குவதில்லை.

எனக்கு இப்போது நன்றாக நினைவில் இருப்பது, அன்று ஹிந்தி பரிட்சை. இரண்டு வருஷ படிப்பில், ஹிந்தி படித்துவிடுவேனே தவிர, அந்த வருட பாடப் புத்தகத்தில் பாதி நான் படிக்காததாகவே இருந்தது. பரிட்சை அன்று காலை ஒரு மணிநேரம் முன்னதாகவே பரிட்சை ஹாலுக்குப் போய் புத்தகத்தில் படிக்காத பாடங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் ஆபத்பாந்தவனாக, வீர ராகவன் வந்தான். அவனைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, நிறைய பக்கங்கள் உள்ள பாடங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று அவனைச் சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டேன். 'ஏண்டா, இதையெல்லாம் ஒரு தடவை கூட நீ படிக்கலையா? என்னடா பரிட்சை எழுதப் போறே நீ?' என்று அவன் சத்தம் போட்டான். ஆனால், நான் கேட்ட பாடங்களில் என்ன இருக்கு? என்று சொல்லவும் செய்தான். இப்படித்தான் நான் விரும்பியே எடுத்துக்கொண்ட ஹிந்தியையும் நான் படித்த லட்சணமும் இருந்தது.

பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு அரசு நடத்துவது என்றேன். அதை மெட்ரிகுலேஷனுக்குச் சமமான எஸ்.எஸ்.எல்.ஸி. பரிட்சை என்பார்கள். இதில் பாஸ் செய்துவிட்டால், காலேஜுக்கு மேல் படிப்புக்குப் போகலாம். அல்லது வேலை தேட ஆரம்பிக்க வேண்டும். இதற்கெல்லாம் முதலில் பாஸ் செய்ய வேண்டும். நிலக்கோட்டையிலிருந்து மாமா வேறு அப்பாவுக்குக் கடிதம் எழுதினார். இந்தப் பரிட்சையில் நல்ல மார்க் எடுத்தால், மதராஸ் பப்ளிக் செர்வீஸ் பரிட்சைக்கு உட்காரலாம். அதில் பாஸ் செய்துவிட்டால் வேலை சுலபமாகக் கிடைத்து விடும் என்று எழுதியிருந்தார். இது எனக்கு புதிதாக ஒரு கவலையைச் சேர்த்தது. ஒரு கண்டம் கழியும் என்று நினைத்துக்கொண்டிருந்தால் இன்னொன்று எனக்காக வாசலிலேயே நின்றுகொண்டு எப்போது உள்ளே நுழைவது என்று பயமுறுத்துவது போலிருந்தது. ஆனால் அது மாமாவின் கார்டு வந்த ஓரிரு நாட்கள் தான். பிறகு அது பற்றிய சிந்தனையே இல்லை.

நன்றி:
Chennai Online
Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis